சம்பா பருவ அறுவடை துவங்கிவிட்ட நிலையில், விவசாயிகள் தாங்களாகவே நெல் கொள்முதல் நிலையங்களை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம் என சமீபத்தில் அறிக்கை விடுத்த தமிழக அரசு இணையதளத்தில் இதற்குண்டான பதிவுகளை மேற்கொள்ளவும் ஆவன செய்துள்ளது.

விவசாயிகளின் கோரிக்கை, தமிழக அரசின் மின்னல் வேக செயலாக்கம்

இந்நிலையில் காலிங்கராயன் பாசன பகுதிகளில் சம்பா சாகுபடி நெற்பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. அங்குள்ள விவசாயிகள் பலர் அரசு சார்பில் இங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர்.

அவர்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக அரசு, முதல்கட்டமாக ஈரோடு வைராபாளையம் மற்றும் S.P. அக்ரஹாரம் ஆகிய 2 இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைத்துள்ளது. இதன் தொடக்க விழா டிசம்பர் 22ம் தேதி நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்க, தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நெல் கொள்முதல் மையத்தினை தொடங்கி வைத்தார்.

நெல் கொள்முதல் விலை விவரங்கள்

‘A’ கிரேடு ரக நெல் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,960 (குவிண்டால் ஒன்றுக்கு) & ஊக்கத்தொகை ரூ.100 பொது ரக நெல் குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,940 (குவிண்டால் ஒன்றுக்கு) & ஊக்கத்தொகை ரூ.75 தனியார் கொள்முதல் நிலையங்களை காட்டிலும் அரசு கொள்முதல் செய்யும் விலை ஒரு கிலோவுக்கு ரூ.5 கூடுதல் என்பது சிறப்பு செய்தி.

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நேரடியாக இம்மையங்களுக்கு கொண்டு சென்றால் மின்னணு தராசு மூலம் துல்லியமாக எடை போடப்பட்டு, அரசு நிர்ணயித்துள்ள வரன்முறைக்குட்பட்ட 17% ஈரப்பத விகிதாச்சாரத்தில் கொள்முதல் செய்யப்படும். அதற்குரிய பணம் ECS எனப்படும் மின்னணு பரிவர்த்தனை மூலம் விவசாயியின் வங்கி கணக்கில் உடனே செலுத்தப்படும், என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இம்மையங்கள் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக மட்டுமே தவிர வியாபாரிகளுக்கு அல்ல. வியாபாரிகள் கொண்டு வரும் நெல் இங்கு வாங்கி கொள்ளப்பட மாட்டாது.

பொட்டாஷ் உர தட்டுப்பாடு, தீர்வு இதோ!

மாவட்டத்தில் பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து தூத்துக்குடியிலிருந்து பொட்டாஷ் உரம் வரவழைக்கப்பட்டு அனைத்து உர விற்பனை நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறப்பு விழா நிகழ்ச்சியில் நுகர்பொருள் வாணிப கழக ஈரோடு மண்டல மேலாளர் முருகேசன், தரக்கட்டுப்பாட்டு துணை மேலாளர் சக்தி, RTO. பிரேமலதா, மாநகராட்சி ஆணையாளர் சிவக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

“கூடிய விரைவில் தமிழக முதல் அமைச்சர் ஈரோடு வருகை” – கூடுதல் தகவல்

பல்வேறு நலத்திட்ட பணிகள் முடிவுற்ற நிலையில் இருப்பதால் அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டவும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிடவும் என பல நிகழ்ச்சிகளுக்காக கூடிய விரைவில் நம் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஈரோடு மாவட்டத்திற்கு வரவிருக்கிறார் என்ற செய்தியும் பேட்டியின் பொது அறிவிக்கப்பட்டது