ஓய்வூதியம் என்பது ஒவ்வொரு அரசு ஊழியரின் இன்றியமையாத தேவை. தன் ஆயுட்காலத்தில் மிக அதிக வருடங்களை அரசுப்பணிக்காக செலவிட்ட ஒரு ஆணோ, பெண்ணோ வயது முதிர்ந்த காலத்தில் யாரையும் எதிர்பார்க்காமல் தன் சுய தேவைகளுக்கு நிதிச்சுமையின்றி வாழ இந்த ஓய்வூதியம் அவர்களுக்கு மிகவும் தேவைப்படுகிறது.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமுல்

கடந்த 2003-ம் ஆண்டு முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அன்றிலிருந்து இன்று வரை சுமார் 17 ஆண்டுகளாக தமிழக அரசு ஊழியர்களும் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களையும், முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.

அ.தி.மு.க.ஆட்சி முடிவுற்று தி.மு.க பெருமளவு வெற்றியை தக்க வைத்துக்கொண்ட இந்த தேர்தல் அறிக்கையில் கூட புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்படும் என்றே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான அரசு ஆணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் இந்த சூழலில் புதிய ஓய்வூதியத் திட்டத்துக்காக பிடித்தம் செய்யப்பட்ட நிதி முதலீடு செய்யப்பட்டுள்ள தகவல் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் இப்போது வெளிவந்துள்ளது.

தங்களிடம் பிடித்தம் செய்யப்படும் ஓய்வூதியத் தொகை எங்கு செல்கிறது என்ற குழப்பம் அரசு ஊழியர்களிடையே தொடர்ந்து இருந்து வந்தது. அந்த நிலவரம் தெரியாததால், கடந்த 15 ஆண்டுகளில் பலர் ஓய்வு பெற்றும், பணியின் போது உயிரிழந்தும், விருப்ப ஓய்வு பெற்றும் ஓய்வூதியம் பெற முடியாமல் சுமார் 23000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்கு பின் அந்த ஓய்வூதிய தொகை ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியிலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியிலும் முதலீடு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பரவலாக அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்த வல்லுநர் குழு தம் அறிக்கையை தமிழக அரசிடம் 2018ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி சமர்ப்பித்தது. ஆனாலும், அந்த அறிக்கையின் விவரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் உள்ள அரசு ஊழியர்கள் எத்தனை பேர்

2003க்குப் பின் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் சுமார் 5.88 லட்சம் பேர் அவர்கள் இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் 2020-21-ஆம் ஆண்டுக்கான கொள்கை விளக்கக் குறிப்பின்படி 2021 மார்ச் மாதம் வரை தமிழக அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகை ரூ.44,769 கோடி.

2019-ம் ஆண்டு முதல் முதலீடு செய்யப்பட்டுள்ள தொகையின் விபரம்

2019, மே 30ம் தேதி முதல் முறையாக ஆயுள் காப்பீட்டு நிறுவன ஓய்வூதிய நிதியில் செலுத்தப்பட்ட தொகை ரூ.2,500 கோடி. அதன் பின்னர், தற்போதுவரை 8 தவணைகளில் ரூ.25,510 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு வட்டி ரூ.2,759.13 கோடி சேர்ந்து, இப்போது மொத்தம் ரூ.28,269.13 கோடியாக உள்ளது.

மேலும், ஏல அடிப்படையிலான கருவூலப்பட்டியில் இதுவரை ரூ.16,500 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.44,769.13 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களின் நம்பிக்கையில் சிறு வெளிச்சம்

தற்போது வெளிவந்துள்ள இந்த விவரம் யாவும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளதால், இது புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு நம்பிக்கை வெளிச்சமாக உள்ளது. இனிமேலாவது ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.